
வாஷிங்டன், ஆகஸ்ட்-10-ஈரானுடனான தற்போதைய மோதலில், அமெரிக்கா தனது நேரடி இராணுவத் தாக்குதல்களுக்குப் பதிலாகப் பொருளாதார மற்றும் வெளியுறவு அழுத்தத்திற்கே முக்கியத்துவம் அளிப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
Axios தளத்திற்கு அளித்த பேட்டியில், தற்போதைய பேச்சுவார்த்தையை ஒரு “சதுரங்க விளையாட்டு” என அவர் ஒப்பிட்டார்.
அதோடு, அமெரிக்காவின் கடற்படை முற்றுகை மற்றும் ஈரானின் கடுமையான பணவீக்கம் காரணமாக, தெஹ்ரானை விட வாஷிங்டனே வலுவான நிலையில் இருப்பதாகவும் ட்ரம்ப் கூறிக் கொண்டார்.
இவ்வேளையில், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்தைச் சீரமைக்க அமெரிக்கா, ஈரான் மற்றும் ஓமான் ஆகிய நாடுகள் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், ஈரான் புதிய மற்றும் கடுமையான நிபந்தனைகளை முன்வைத்துள்ளது.
_”அமெரிக்கா தனது இராணுவ நடவடிக்கைகளை நிரந்தரமாக நிறுத்த வேண்டும், தடைகளை நீக்க வேண்டும், வட்டாரத்திலிருந்து படைகளைத் திரும்பப் பெற வேண்டும் மற்றும் போர் சேதங்களுக்கு முழு இழப்பீடு வழங்க வேண்டும்; அதுவரை இந்த முக்கிய கடல்வழிப் பாதை திறக்கப்படாது”_ என ஈரானியப் பாதுகாப்பு அதிகாரிகள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர்.
இந்தக் கடுமையான கோரிக்கைகளுக்கு மத்தியிலும், ஈரானிய தலைமையின் உள்வட்டத்தில் கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.எனினும், ஈரான் வெளியில் தனது உறுதியான நிலைப்பாட்டையே வெளிப்படுத்தி வருகிறது.



