ஜொகூர் பாரு, நவம்பர் 1 – “அந்த ஏழு வயது பாலகன், பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் காப்பாற்றப்படாமல் போயிருந்தால், இந்நேரம் அவனுக்கு என்னவாகியிருக்கும் என்பதை நீதிமன்றத்தால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை”
கடந்த ஆகஸ்ட்டு மாதம், சொந்த மகனை சித்திரவதை செய்து, புறக்கணித்த 27 வயது தனித்து வாழும் தாய் ஒருவருக்கும், அவருடன் ஒரே வீட்டில் தங்கியிருந்த 30 வயது அவின் சுவா எனும் நண்பருக்கும், 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நீதிபதி வி.எம்.மாபோல் ஷிலா கண்ணீர் மல்க அவ்வாறு தெரிவித்தார்.
ஒரு மாதக் காலத்தில், அந்த ஏழு வயது சிறுவனுக்கு நேர்ந்த நிலையை எண்ணி தீப்பளிக்கும் போது நீதிபதி வருந்தி அவ்வாறு கூறினார்.
தனது மகளை துன்புறுத்தியது உணவு கொடுக்காமல் அடைத்து வைத்து புறக்கணித்தது என இரு வேறு குற்றங்களை அவர்கள் எதிர்நோக்கியிருந்தனர்.
ஒவ்வொரு குற்றத்திற்கும் ஏழாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வேளை, அவ்விருவரும் கைதுச் செய்யப்பட்ட ஆகஸ்ட்டு 12-ஆம் தேதியிலிருந்து சிறைத் தண்டனை ஒருசேர அமலுக்கு வருவதாக நீதிபதி அறிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட்டு 16-ஆம் தேதி, தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து அவர்கள் விசாரணை கோரிய வேளை; செப்டம்பர் 27-ஆம் தேதி அவர்கள் தங்கள் வாக்குமூலத்தை மாற்றி குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டதை அடுத்து அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட்டு மாத தொடக்கத்தில், வீடொன்றில், சொந்த தாய் உட்பட இரு பெண்களால் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு இலக்கான ஏழு வயது சிறுவன் மீட்கப்பட்டதாக, ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.