
குவா மூசாங், செப்-15–ஆட்டிசம் மற்றும் ADHD எனும் கவனக்குறைவு மிகைச் செயல்பாட்டுக் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய, குழந்தைகளை ஆரம்பக் கட்டப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு கல்வி அமைச்சு பெற்றோர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
வளர்ச்சித் தாமதம் அல்லது கற்றல் சிரமங்களைக் கொண்ட குழந்தைகளை ஆரம்பத்திலேயே அடையாளம் காண அப்பரிசோதனை மிக முக்கியம் என கல்வி அமைச்சர் Datuk Seri Fadhlina Sidek தெரிவித்தார்.
உளவியலாளர்கள் மற்றும் சிகிச்சையாளர்கள் உள்ளிட்ட நிபுணர்களின் உதவியுடன் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கற்றல் திறன் மதிப்பிடப்படுவதாக அவர் கூறினார்.
குழந்தையின் வளர்ச்சி அல்லது கற்றல் குறித்து ஏதேனும் கவலை இருந்தால், பெற்றோர் தயங்காமல் பரிசோதனைக்கு முன்வர வேண்டும். அரசாங்கம் அச்சேவையை இலவசமாக வழங்குவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும், குழந்தைகளுக்குத் தேவையான தொடர் ஆதரவு கொடுப்பதில் பெற்றோருக்கு முக்கியப் பங்கு உள்ளது. எனவே தகுந்த பரிசோதனை மற்றும் ஆதரவைப் பெற பெற்றோர் முன்வர வேண்டும் என Fahdlina கேட்டுக் கொண்டார்.



