
கூலிம், செப்-15–கெடா, Taman Tiram பகுதியில் 39 வயது மாது ஒருவர் தமது கணவரால் 13 முறை கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உயிரிழந்தார். அச்சம்பவம் நேற்றிரவு வீடொன்றில் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
43 வயதுடைய சந்தேக நபர், மடிக்கக்கூடிய கத்தியால் தனது மனைவியின் மார்பில் ஏழு இடங்களிலும், வயிற்றில் ஐந்து இடங்களிலும், வலது விலா எலும்புப் பகுதியில் ஓரிடத்திலும் குத்தியதாக காவல்துறையிடம் ஒப்புக் கொண்டதாக கூலிம் மாவட்ட காவல் துறை தலைவர் Superintenden Syamsul Sinring தெரிவித்தார்.
சம்பவத்துக்குப் பின்னர், அந்நபர் குளித்து விட்டு சிறார் குழந்தை பராமரிப்பாளரிடம் இருந்த தமது பிள்ளையை அழைத்துச் சென்று தமது சகோதரியிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் லூனாஸ் காவல் நிலையத்திற்குச் சென்று சரணடைந்த அவர், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் சுமார் 20 சென்டிமீட்டர் நீளமுள்ள கத்தியையும் ஒப்படைத்தார்.
கத்திக் குத்துக்கு ஆளான மாதுவை அவரது குடும்பத்தினர் கூலிம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், இரவு 9.30 மணியளவில் அவர் உயிரிழந்து விட்டது உறுதி செய்யப்பட்டதாக Syamsul Sinring கூறினார். பொறாமை காரணமாக ஏற்பட்ட வாக்குவாதமே அக்கொடூர கொலைக்குக் காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்தில் படுக்கை விரிப்பு, தலையணை உள்ளிட்ட பொருட்களில் இரத்தத் தடயங்கள் கண்டறியப்பட்டதுடன், தடயவியல் குழு 11 மாதிரிகளையும் சேகரித்தது. உடல் சவப் பரிசோதனைக்காக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அச்சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



