
கோலாலம்பூர், செப்டம்பர்-14-கோலாலம்பூர், லெபோ புடுவில் துணிக் கடைகள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் என்ற போர்வையில் சட்டவிரோதமாகச் செயல்பட்டு வந்த 4 சட்டவிரோத மருந்தகங்கள் மற்றும் போலி கிளினிக்குகளைப் சுகாதார அமைச்சு அதிரடியாகக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளது.
கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயா சுகாதார இலாகாவின் மருந்தியல் அமுலாக்கப் பிரிவுத் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில், வங்காளதேச நாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட இரத்த அழுத்த மருந்துகள், antibiotics நுண்ணுயிர் கொல்லிகள், பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மற்றும் மயக்க மருந்து ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
வெளிநாட்டுத் தொழிலாளர்களை இலக்காகக் கொண்டு, பின் அறைகளில் போலிப் பரிசோதனைகள் நடத்தப்பட்டு இம்மருந்துகள் விநியோகிக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன், இச்சோதனையில் உரிமமின்றி இயங்கியது மற்றும் 382 சட்டவிரோத அறைகளைக் கட்டியதற்காக DBKL 28 நோட்டீஸ்களை வழங்கியதோடு, குடிநுழைவு விதிமீறல்களுக்காக 472 வெளிநாட்டினரைக் குடிநுழைவு இலாகா கைதுச் செய்துள்ளது.
இந்தச் சட்டவிரோத கிளினிக்குகளைக் குத்தகைக்கு எடுத்து நடத்திய நபர்கள் மற்றும் போலி மருத்துவர்களைக் கண்டறிய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



