
கூச்சிங், மே-8-ரேபிஸ் எனப்படும் வெறிநாய்க்கடி நோய் தொடர்பில் சரவாக்கில் இவ்வாண்டின் நான்காவது மரணம் பதிவாகியுள்ளது.
பிந்துலுவைச் சேர்ந்த 63 வயது முதியவர் ஒருவர் முறையான சிகிச்சை பெறாததால் உயிரிழந்துள்ளார்.
மே 3-ஆம் தேதி பிந்துலு மருத்துவமனையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் நாய்க்குட்டி ஒன்று கடித்தபோது, அந்த முதியவர் மருத்துவ உதவி நாடவில்லை என்றும், காயத்தை வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே நீரால் கழுவியதாகவும் மாநில சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்நிலையில் ஏப்ரல் இறுதியில் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, தண்ணீர் குடிக்க மறுக்கும் நிலை உருவான பிறகே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
2017 முதல் சரவாக்கில் இதுவரை 94 பேருக்கு ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் 87 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே,இவ்வாண்டில் மட்டும் சரவாக்கில் 8,000-க்கும் மேற்பட்ட விலங்கு கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதில் அதிர்ச்சியூட்டும் தகவல் என்னவென்றால், 70 விழுக்காட்டுச் சம்பவங்கள் வீட்டு செல்லப்பிராணிகளால் ஏற்பட்டவை.
விலங்குகள் கடித்தால் உடனடியாக 15 நிமிடங்கள் சோப்பு போட்டு நீரால் கழுவி, தாமதிக்காமல் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என சுகாதார அதிகாரிகள் பொது மக்களை அறிவுறுத்துகின்றனர்.



