
சிங்கப்பூர், ஏப் 16-விமானத்தில் ஒவ்வொரு நபரும் இரண்டு சாதனங்களை மட்டுமே எடுத்துச் செல்ல அனுமதிக்கும் புதிய விதி நேற்று ஏப்ரல் 15ஆம் தேதி அமலுக்கு வந்ததால் புறப்பட்டுச் செல்லும் பயணிகளிடமிருந்து 15 பவர் பேங்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நள்ளிரவு முதல் மாலை 3 மணிவரை விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சோதனை செய்யப்பட்ட பயணிகளால் இந்த பவர் பேங்குகள் ஒப்படைக்கப்பட்டன என்று சாங்கி விமான நிலையக் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்தச் சோதனைச் செயல்பாட்டில் சுமார் 275 விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன.
முனையங்கள் 1, 2 மற்றும் 3-இல் உள்ள பயணிகள் விமானங்களில் ஏறுவதற்கு புறப்படும் நுழைவாயில்களிலும், முனையம் 4-இல் உள்ள குடிநுழைவு புறப்பாடு பகுதிக்குப் பிறகும் பாதுகாப்புச் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஏப்ரல் 15 ஆம்தேதி முதல், இரண்டுக்கும் மேற்பட்ட பவர் பேங்குகளை எடுத்துச் செல்லும் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கு முன்பு கூடுதல் பவர் பேங்குகளை அப்புறப்படுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுவார்கள் என அனைத்துலக சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பால் வெளியிடப்பட்ட விதிமுறையை ஏப்ரல் 6ஆம்தேதி சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது.



