
செகாமாட், ஏப்ரல்-4-ஜோகூர், செகாமாட், கெமாஸ் பாருவில் மூவரின் உயிரை பலிகொண்ட மரண விபத்து தொடர்பான விசாரணையை போலீஸார் விரைந்து முடித்து, குற்றவாளியை நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்.
நெகிரி செம்பிலான் ஆட்சிக் குழு உறுப்பினரும், நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான J. அருள் குமார் அதனை வலியுறுத்தியுள்ளார்.

அவ்விபத்தில் வேனை மோதிய டிரேய்லர் லாரி ஓட்டுநர், சம்பவத்தின் போது போதைப்பொருள் உட்கொண்டது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
அவரின் அலட்சியத்தால், 3 உயிர்கள் பறிபோய், ஒரு குடும்பமே தாங்க முடியாத வேதனையில் இருப்பதால், அவர்களுக்கு விரைவிலேயே நீதி கிடைக்க வேண்டுமென, அருள் குமார் சொன்னார்.
அந்த டிரேய்லர் லாரி நிறுவனம் மீதும், சாலைப் போக்குவரத் துறையான JPJ, APAD எனப்படும் தரைப் பொது போக்குவரத்து நிறுவனமும் தணிக்கைச் செய்து விசாரிக்க வேண்டும்.

ஓட்டுநர்கள் விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதை உறுதிச் செய்யத் தவறியதற்காக, லாரி நடத்துநர்களும் பொறுப்பேற்க வேண்டுமென, அருள் குமார் கூறினார்.
அவர் முன்னதாக, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறச் சென்ற, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்குடன், செகாமாட் மருத்துவமனை சென்றார்.
விபத்தில் உயிர் தப்பி, கடுமையான காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் இருவருக்கு, சிறிய நிதியுதவியும் அருள் குமார் வழங்கினார்.
அக்கோர விபத்தில், குடும்பத்தில் மூத்தவர்களான தாத்தா, பாட்டியையும், இன்னொரு நெருங்கிய உறவினரையும் இழந்து அக்குடும்பம் தவிக்கிறது.



