
புத்ராஜெயா, ஆகஸ்ட்-20-வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சு அதன் பணியாளர்கள் மத்தியில் தேசப்பற்று உணர்வைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. பல்வேறு பின்னணிகள், நிபுணத்துவத் துறைகள் மற்றும் பணிகளைச் சேர்ந்த தனிநபர்களை உள்ளடக்கியுள்ள அமைச்சின் பணியாளர்கள் மக்களுக்குச் சேவையாற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக வீடமைப்பு, ஊராட்சித்துறை அமைச்சர் Nga Kor Ming தெரிவித்தார்.
பன்முகத்தன்மையில் ஒற்றுமை என்ற உணர்வு அவர்களுக்கு உந்து சக்தியாகவும் இருக்கிறது. சுதந்திரம் என்பது வெறும் ஜாலூர் கெமிலாங் கொடியை ஏற்றுவதிலோ அல்லது ஆகஸ்ட் மாதம் முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவதிலோ மட்டும் அடங்கவில்லை. மாறாக, மக்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதில் தேசபக்தியை வெளிப்படுவதும் முக்கியம் என அவர் வலியுறுத்தினார்.
அமைச்சின் 2026 ‘செமராக் ஜீவா மெர்டேக்கா’ (Semarak Jawa Merdeka) நிகழ்வைத் தொடக்கி வைத்து உறையாற்றுகையில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார். மலேசியா மடானி லட்சியங்களுக்கு ஏற்ப, தேசபக்தி உணர்வை முன்னிலைப்படுத்தும், கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடும் மற்றும் ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் அமைச்சின் ஒட்டுமொத்த பணியாளர்களையும் ஒன்றிணைப்பதற்கான ஒரு முக்கியத் தளமாக அந்நிகழ்வு அமைவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
சுதந்திரத் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக “Gemersik Merdeka” செயற்கை நுண்ணறிவு (AI) போட்டி, PUSPANITA HYROX மெர்டேகா, கையெழுத்துப் பிரதி கண்காட்சி, தினசரி தேசிய கீத ஒலிபரப்பு, துறைவாரியான அலங்காரப் போட்டி ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
‘செமராக் ஜீவா மெர்டேக்கா’ தொடக்க நிகழ்வில் துணை அமைச்சர் Datuk Hajah Aiman Athirah Binti Sabu, தலைமைச் செயலாளர் Datuk Wira Dr. M Noor Azman bin Taib, உயர்மட்ட நிர்வாகத்தினர், துறைத் தலைவர்கள், பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அந்நிகழ்வுக்கு ஜாலூர் கெமிலாங் மிட் ஒப்படைப்பு, மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, திடக்கழிவு மற்றும் பொதுச் சுத்திகரிப்பு மேலாண்மைக் கழகம் ஆகியவற்றின் வாகன அணிவகுப்பு, மலாய் கையெழுத்துப் பிரதி கண்காட்சி ஆகியவை மேலும் மெருகு சேர்த்தன.



