
கோலாலம்பூர், ஜூன்-29- மகளின் கற்பைக் காப்பவளாகத் தான் ஒரு தாய் இருப்பாள், இருக்க வேண்டும். ஆனால், சொந்த மகளின் கற்பையே சூறையாட தனது காதலனை ஒரு தாய் அனுமதித்த கொடூரம் கோலாலம்பூரில் நிகழ்ந்துள்ளது.
கடந்தாண்டு மத்தியில் 14 வயதில் வீட்டில் தாயின் அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது மகள் முதன் முறையாக அக்கொடுமைக்கு ஆளானாள்.
தன்னை யாரோ தொடுவது போலிருந்ததால் திடீரென கண்விழித்த மகள், தன் முன்னே 36 வயது தாயும், அவரின் 61 வயது காதலனும் இருப்பதைக் கண்டாள்.
கண்ணிமைக்கும் நேரத்தில் தாயின் கண் முன்னே மகள் கற்பழிக்கப்பட்டாள்.
இந்நிலையில் கடந்த வாரம் தன்னை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று கற்பழிக்க அவ்வாடவர் திட்டம் போட்டிருப்பது அப்பெண் பிள்ளைக்குத் தெரிந்து விட்டது.
தனது தாயும் அந்நபரும் கூட்டுசேர்ந்து அத்திட்டத்தில் இறங்கியுள்ளதை, வாட்சப் உரையாடல் மூலம் எப்படியோ தெரிந்துகொண்ட மகள் அச்சத்தில் வீட்டை விட்டு ஓடியிருக்கிறாள்.
தோழி வீட்டில் தஞ்சமடைந்து, பின்னர் பாண்டான் போலீஸ் நிலையத்தில் அவள் புகாரளித்ததாக, புக்கிட் அமான் போலீஸின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வன்கொடுமைப் பிரிவு தெரிவித்தது.
இதையடுத்து ஒரு பாதுகாவலராக பணிபுரியும் தாயும், சொந்தத் தொழில் செய்யும் அவரின் காதலரும் வெள்ளிக்கிழமைக் கைதுச் செய்யப்பட்டனர்.
இருவரும் விசாரணைக்காக ஒரு வாரம் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.