
ஜோகூர், ஆகஸ்ட் 14 – ஜோகூரில் ‘சிங்க்’ அதாவது குழாய் அடைத்திருப்பதாக வந்த புகாரை சரிசெய்யச் சென்ற பிளம்பருக்கு, குழாயுக்குள் மலைப்பாம்பு இருந்தது தெரியவந்ததால் பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கெம்பாஸிலுள்ள (Kempas) ஒரு வீட்டில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்தது. 38 வயதான ஆடவர், அடைப்பை சரிசெய்ய குழாயின் ஒரு பகுதியை வெட்டியபோது, அதற்குள் இருந்த மலைப்பாம்பின் உடல் துண்டிக்கப்பட்டது.
குழாயை வெட்டும்போது உள்ளே பாம்பு இருப்பது தனக்குத் தெரியவில்லை என்றும் தவறுதலாக அதன் தலை மற்றும் உடல் துண்டிக்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். பின்னர் குழாயிலிருந்து பாம்பை வெளியே எடுத்ததாக அவர் தெரிவித்தார்.
இதுபோன்ற சம்பவத்தை எதிர்கொள்வது தனக்கு இதுவே முதல் முறை என்றும் அவர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.



