
பத்து பஹாட், செப்டம்பர்-19-ஜோகூர், பத்து பஹாட்டில் நாயைப் பிடிக்கும் நடவடிக்கையின் போது பெண் ஒருவரிடம் அநாகரிகமான முறையில் சைகை காட்டிய ஒப்பந்த ஊழியர் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செப்டம்பர் 17-ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் குடியிருப்புப் பகுதியில் தெரு நாய்களைப் பிடிக்கும் நடவடிக்கை நடைபெற்றபோது, அங்கு சென்ற 29 வயது பெண்ணுக்கும் பணியாளர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விலங்குகள் நடத்தப்படும் விதம் குறித்து அங்கிருந்தவர் வாக்குவாதம் செய்து வீடியோ பதிவு செய்தபோது, பணியாளர் ஒருவர் கேமராவை நோக்கி நடுவிரலைக் காட்டி அநாகரிக சைகை செய்யும் வைரல் வீடியோ பரவியது.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஊழியர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் லிங் தியான் சூன் தெரிவித்தார்.
அந்த ஊழியர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள நிலையில், தவறு நிரூபிக்கப்பட்டால் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பத்து பகாட் நகராண்மைக் கழகம் (MPBP) தெரிவித்துள்ளது.



