
கோலாலாம்பூர், செப்டம்பர்-23,
மக்களின் வரிப் பணத்தில் நடத்தப்படும் பொது பல்கலைக்கழகங்கள், சொந்த உழைப்பைப் போட்டு படிப்பில் சிறந்து விளங்கும் மலேசியர்களுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும்.
மாறாக, பட்டப்படிப்புக்கான இடங்களை விற்பதில் கவனம் செலுத்தக் கூடாது என, மலேசியத் தமிழ்ப் பள்ளி கல்வி அபிவிருத்தி மற்றும் நலன் சங்கத்தின் தலைவர் எம். வெற்றிவேலன் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், SATU போன்ற பண அடிப்படையிலான மாணவர் சேர்க்கைத் திட்டங்களும், அதிகரித்து வரும் வெளிநாட்டு மாணவர் எண்ணிக்கையும், உள்ளூர் STPM மாணவர்களின் வாய்ப்புகளை பறித்துக்கொண்டு வருவதே நிதர்சன உண்மை என்றார் அவர்..
2025/2026 கல்வியாண்டில் 109,866 STPM மாணவர்கள் இளங்கலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 28% மாணவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை;
4.0 CGPA என 100% மதிப்பெண் பெற்றிருந்த மிகச் சிறந்த மாணவர்களும் அவர்களில் அடங்குவர்.
எனவே, திறமை அடிப்படையிலான மாணவர் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென வடிவேலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதோடு, புள்ளிவிவரங்களை வெளிப்படையான வெளியிடுவது, வெளிநாட்டு மாணவர் சேர்க்கைக்கு உச்சவரம்பு விதிப்பது, STPM மற்றும் மெட்ரிகுலேஷனை சமநிலைப்படுத்துவது, பல்கலைக் கழக நுழைவுக்கு பொதுவான ஒரே தேர்வை அறிமுகப்படுத்துவது போன்ற கோரிக்களையும் அவர் முன்வைத்தார்.
அரசாங்கப் பல்கலைக் கழகங்கள் மக்களுக்குச் சொந்தமானவை. அவை பணத்தின் அடிப்படையில் அல்லாமல், தகுதியின் அடிப்படையில் மலேசியர்களுக்குச் சேவை செய்வதன் மூலமே அவற்றின் அடிப்படை நோக்கத்திற்குத் திரும்ப வேண்டும் என்றார் அவர்.