
தெலுக் இந்தான், ஆகஸ்ட் 23 – பள்ளியில் நடைபெற்ற ‘பூபோர் லாம்போக்’ (Bubur Lambuk) தயாரிப்பு நிகழ்ச்சியின் போது கொதிக்கும் கஞ்சியில் கை விழுந்து தீக்காயமடைந்த மாணவி ஒருவருக்கு 129,040 ரிங்கிட் இழப்பீடு வழங்க பேராக், தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ரீ இந்தான் தேசியப் பள்ளியில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
சமையல் நடைபெற்ற பகுதியிலேயே கணித வகுப்பை நடத்தியதும், விபத்து நடந்த பின்னர் மாணவியை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லாமல் தாமதப்படுத்தியதும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியம் என நீதிபதி தீர்ப்பளித்தார்.
சமையல் நடைபெற்ற இடத்தில் வழுக்கி விழுந்ததில் மாணவியின் இடது கை கொதிக்கும் கஞ்சியில் விழுந்து பலத்த காயங்கள் மற்றும் நிரந்தரத் தழும்புகள் ஏற்பட்டன.
மாணவியின் தாயார் எம். தனலெட்சுமி தொடர்ந்த இந்த வழக்கில், கடுமையான பாதிப்புகளுக்கான இழப்பீடாக 100,000 ரிங்கிட், தழும்புகளுக்காக 24,000 ரிங்கிட், தீக்காயங்களுக்கு 5,000 ரிங்கிட் உட்பட மொத்தம் 129,040 ரிங்கிட்டை அரசு மற்றும் பள்ளித் தரப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.



