
ஜெம்போல் – கடந்த திங்கட்கிழமை, பஹாவ், தாமான் செட்டலிட்டில் (Taman Satelit), சில நாட்களாக பள்ளிக்கு வராத ஆசிரியையின் வீட்டை பரிசோதித்தபோது, அவர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அவர் பணி புரிந்த பள்ளிக்கும் அப்பகுதி மக்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
55 வயதான அந்த ஆசிரியை வழக்கம் போல் பள்ளிக்குச் செல்லாததைத் தொடர்ந்து, அவரின் நிலையைக் கண்டறிய பள்ளியின் மூத்த உதவியாளர் ஆசிரியரின் வீட்டிற்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வீட்டிற்கு வெளியே வாகனம் இருந்தும் அவர் தொலைபேசி அழைப்புக்கு பதிலளிக்காதைத் தொடர்ந்து, பள்ளி உதவியாளர் சந்தேகமுற்று தீயணைப்பு துறையினரைத் தொடர்புக் கொண்டுள்ளார்.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் கதவைத் திறந்து பார்த்தபோது, பாதிக்கப்பட்டவர் இறந்து கிடந்ததைக் கண்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவருக்கு இதய நோய் வரலாறு இருப்பதாகவும், தேசிய இதய நிறுவனத்தில் (IJN) சிகிச்சை பெற்றுள்ளதாகவும் அறியப்படுகின்ற அதே வேளை எவ்வித குற்றவியல் கூறுகளும் இல்லை என்று ஜெம்போல் மாவட்ட காவல்துறைத் தலைவர், நோர்ஹிஷாம் முஸ்தாபர், உறுதிப்படுத்தியுள்ளார்.