
லண்டன், செப்-16-பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அவரைக் காண லண்டனின் ‘The Shard’ கட்டிடத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்த நிலையில், அந்நிகழ்ச்சி திடீரென ரத்து செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அதனால் விஜய்யை பார்ப்பதற்கும், அவருடன் செல்ஃபி எடுப்பதற்கும் இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து பல மணி நேரம் காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
நிகழ்ச்சிக்குத் தேவையான அனுமதி கிடைக்காததாலும், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் அம்முடிவு எடுக்கப்பட்டதாக விஜய்யின் பாதுகாப்புக் குழுவினர் அறிவித்தனர். கூட்ட நெரிசல் தொடர்பாக Metropolitan காவல்துறை பாதுகாப்பு காரணங்களை எடுத்துரைத்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பேராளர் குழுவிற்குத் தலைமையேற்று விஜய் இங்கிலாந்து சென்றுள்ளார். அவரது பயணத்தின் போது சுமார் 12,300 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அம்முதலீட்டு முயற்சிகள் மூலம் தமிழ்நாட்டை ஆசியாவின் மேம்பட்ட உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப மையமாக உருவாக்குவதுடன், 9,400-க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, விஜய் தனது இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு இன்று இந்தியா திரும்பத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



