ஜோர்ஜ் டவுன், ஜூலை 18 – பினாங்கில் ஜாலான் Ibbetson னில் துங்கு அப்துல் ரஹ்மான் புத்ரா தொழிற்நுட்ப இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த 28 மாணவர்கள் கடந்த வெள்ளிக்கிழமை பொறித்த தண்டூரி கோழி உணவை உட்கொண்டதைத் தொடர்ந்து நச்சுணவின் பாதிப்புக்கு உள்ளாகினர். அந்த பள்ளியின் தங்கும் விடுதியின் சிற்றுண்டி சாலையில் மதிய உணவு வேளையில் அந்த உணவை உட்கொண்ட அந்த மாணவர்கள் மோசமான நச்சுணவு பாதிப்புக்கு உள்ளாகினர். அவர்கள் அனைவரும் பினாங்கு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் நிலைமை சீரானதைத் தொடர்ந்து வீடு திரும்புவதற்கு அனுமதிக்கப்பட்டதாக பினாங்கு ஆட்சிக்குழு உறுப்பினர் டேனியல் கூய் ஷி சென் ( Daniel Gooi zi Sen ) தெரிவித்தார்.
அந்த பள்ளியைச் சேர்ந்த 496 மாணவர்கள் மற்றும் இரண்டு தங்கும் விடுதி வார்டர்களும் அந்த உணவை உட்கொண்டபோதிலும் 28 மாணவர்கள் மட்டுமே நச்சுணவின் பாதிப்புக்கு உள்ளாகினர். தீமோர் லாவுட் மாவட்ட பகுதியில் நிகழ்ந்த இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 28 மாணவர்களும் பினாங்கு பொது மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டதாக அவர் கூறினார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.