
ஜோர்ஜ்டவுன், மே-13 – பினாங்கு மாநில முன்னாள் இரண்டாவது துணை முதல் அமைச்சர் பேராசிரியர் Dr பி.ராமசாமி, அதிகார துஷ்பிரயோகம் தொடர்பில் நாளை நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறார்.
அவரின் வழக்கறிஞர் ஷம்ஷெர் சிங் தின்ட் (Shamsher Singh Thind) அதனை உறுதிப்படுத்தினார்.
76 வயது ராமசாமியை, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு கொண்டுச் சென்று, 2009 MACC சட்டத்தின் கீழ் அவர் குற்றம் சாட்டப்படுவார்.
அச்சட்டப் பிரிவானது, அதிகாரத்திலிருப்பவர்கள் பதவிகளைப் பயன்படுத்தி தங்களுக்கும் மற்றவர்களுக்கும் நன்மைப் பெற்றவர்களை குற்றம் சாட்டுவதாகும்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், லஞ்ச பணத்தை விட 5 மடங்கு அதிகமானத் தொகையில் அபராதமும் விதிக்கப்படலாம்.
எனினும், ராமசாமி எதிர்நோக்கவிருக்கும் குற்றச்சாட்டை MACC வெளியிடவில்லை என ஷம்ஷெர் தெரிவித்தார்.
என்ற போதிலும், துணை முதல் அமைச்சராக இருந்த காலத்தில், பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் தங்க இரத கொள்முதல் தொடர்பில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ராமசாமி விசாரிக்கப்படுவதாக, கடந்த டிசம்பரில் செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அக்குற்றச்சாட்டுகளை மறுத்திருந்த ராமசாமி, அறப்பணி வாரியத்தின் கணக்குகள் முறையாக தணிக்கைச் செய்யப்பட்டு அங்கீகரிப்பட்டதை சுட்டிக் காட்டியிருந்தார்.
தற்போது எதிர்கட்சியில் இருப்பதால், அரசியல் காரணங்களுக்காக தமது நற்பெயர் களங்கப்பட்டிருக்கப்படுவதாக, உரிமைக் கட்சியின் தலைவர் அவர் கூறிக் கொண்டார்.