
குளுவாங், ஜூலை-10-பொது மக்கள் தங்களின் ஆதரவைத் தொடர்ந்து வழங்கினால், வரும் காலங்களில் SARA எனப்படும் அத்தியாவசியப் பொருட்களுக்கான 100 ரிங்கிட் உதவித்தொகையின் அளவை அதிகரிக்க மடானி அரசாங்கம் தயாராக இருப்பதாகப், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்துள்ளார்.
அமுலாக்க நடவடிக்கைகள் மற்றும் இலக்கு நோக்கிய மானிய மாற்றங்கள் மூலமாக நாட்டுக்குக் கிடைக்கும் சேமிப்பு நிதியை, தேவையுடைய ஏழை எளிய மக்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்றார் அவர்.
பொருளாதாரக் கசிவுகளைத் தடுப்பதன் மூலம் அரசாங்கத்திற்குத் திரும்பக் கிடைக்கும் ஒவ்வொரு ரிங்கிட்டும் தேக்கி வைக்கப்படாது என்றும், அவை மக்களின் வாழ்வாதாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இன்னும் கூடுதலான நிதி உதவியாகவே மக்களிடம் தடம் மாறும் என்றும் அவர் விளக்கினார்.
எனவே, நாட்டின் நீண்டகால பொருளாதார நிலைத்தன்மைக்காக அரசாங்கம் மேற்கொண்டு வரும் சீர்திருத்த நடவடிக்கைகளை பொது மக்கள் பாரபட்சமின்றி நடுநிலையோடு மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ஜோகூர் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று ஜோகூரில் பேசியபோது அன்வார் அவ்வாறு கூறினார்.
இன்று காலை 8 மணி தொடங்கி சுமார் 2.7 மில்லியன் ஜோகூர் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை ஆற்றுகின்றனர்.



