கோலாலம்பூர், டிசம்பர் 1 – யமஹா ஈகோ ரக மோட்டார் சைக்கிள் ஒன்றை, ஹோண்டா சிவிக் கார் ஒன்று மோதித் தள்ளும் காணொளி ஒன்று நேற்று தொடங்கி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சண்டைக்கு பின்னர் தனது மனைவியிடமிருந்து தப்பி ஓட முயன்ற காரோட்டி, வழிமறித்து நின்ற மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்துக்கு பின்னர், தப்பி ஓடிவிட்ட அந்த கார் ஓட்டுனர், நேற்று மாலை மணி 7.45 வாக்கில், செலாயாங், ஜாலான் பிடாராவில் கைதுச் செய்யப்பட்டதை, கோம்பாக் மாவட்ட இடைக்கால போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் நோர் அரிப்பின் முஹமட் உறுதிப்படுத்தினார்.
வைரலான 18 வினாடி காணொளியில் இடம்பெற்றுள்ள சம்பவம், நேற்று முன்தினம் நவம்பர் 29-ஆம் தேதி, மாலை மணி 3.30 வாக்கில், ரவாங், ஜாலான் துன் தேஜா 3 சாலையில் நிகழ்ந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சண்டைக்கு பின் மனைவியிடமிருந்து தப்பி ஓட முயன்ற போது அந்த ஆடவர், மோட்டார் சைக்கிளோட்டியை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அச்சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காரோட்டியை தடுத்து நிறுத்த முயன்ற மோட்டார் சைக்கிளோட்டி, அதே காரால் மோதப்பட்டதில் கையிலும், காலிலும் காயமடைந்தார்.