மருத்துவப் பட்டதாரி அதிகாரிகளின் பயிற்சி முறையில் சீர்திருத்தம் தேவை: லிங்கேஸ்வரன் வலியுறுத்தல்

PPS எனப்படும் மருத்துவப் பட்டதாரி அதிகாரிகளின் நலன் மற்றும் அவர்களின் பயிற்சியின் தரம் குறித்து சுங்கை பாக்காப் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர் Dr லிங்கேஸ்வரன் ஆர் அருணாச்சலம் சில முக்கிய கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
மே 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் படி, அதிகாரிகளின் வேலை நேரம் வாரத்திற்கு 60 முதல் 62 மணிநேரமாகக் குறைக்கப்பட்டிருப்பதை வரவேற்ற அவர், இது அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பதோடு, சமநிலையான வாழ்க்கையை உறுதிச் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.
அவர்கள் வெறும் ‘கூடுதல் வேலையாட்கள்’ அல்ல, தகுந்த பயிற்சியாளர்கள் என்பதை இந்த விதிமுறை அங்கீகரிப்பதாக அவர் கூறினார்.
இருப்பினும், கள யதார்த்தத்தை உணராமல் shift முறையைக் கட்டாயமாக்குவது, அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் மீது அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என லிங்கேஷ் எச்சரித்தார்.
மேலும், கற்றலில் தொடர்ச்சி இருக்க வேண்டும் என்றால், மீண்டும் பழைய On-call முறையை அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மருத்துவப் பயிற்சி முறையானது e-log book எனும் வெறும் டிஜிட்டல் ஆவணத்தோடு நின்றுவிடாமல், உண்மையான மருத்துவத் திறனை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.
எனவே, தரமான சிகிச்சை மற்றும் தொழில்முறைத் தரத்தைப் பாதுகாக்க ஒரு முழுமையான சீர்திருத்தம் அவசியம் என நேற்று வெளியிட்ட அறிக்கையில் லிங்கேஷ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.



