
கோலாலம்பூர், ஜூன்-25-கோலாலம்பூர் முழுவதும் கடந்த ஜனவரி 1 முதல் ஜூன் 23 வரை நடத்தப்பட்ட 868 அதிரடி சோதனைகளில், சட்டவிரோத சூதாட்டம் மற்றும் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 1,156 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus வெளியிட்ட விவரங்கள் பின்வருமாறு…
2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டியை இலக்கு வைத்து நடத்தப்பட்ட சூதாட்டங்கள் மீதான சோதனைகளில் 24 பேர் கைதாகி மின்னியல் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சட்டவிரோத பொது லாட்டரிகள் தொடர்பான 486 சோதனைகளில் 487 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
இவர்களிடமிருந்து RM4,886 ரொக்கப் பணம் மற்றும் 451 கைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இணைய சூதாட்ட மையங்களில் மேற்கொள்ளப்பட்ட 322 சோதனைகளில் 341 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
அங்கிருந்து, கணினித் திரைகள், கைப்பேசிகள் மற்றும் இணைய கட்டமைப்பு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டன.
மோசடி அழைப்பு கும்பலின் விநியோக மையங்களாகச் செயல்பட்ட 21 இடங்கள் முற்றுகையிடப்பட்டதில் 152 பேர் கைதுச் செய்யப்பட்டனர்.
உள்ளரங்கு சூதாட்ட விடுதிகளில் நடத்தப்பட்ட 16 சோதனைகளில் 146 பேர் கைதுச் செய்யப்பட்டனர்; வெளியரங்கு சூதாட்டத்தில் 6 பேர் கைதாகினர்.
ஒட்டுமொத்தமாக இந்த நடவடிக்கைகளின் மூலம் RM45,033 ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதே சமயம், சுமார் 96,878 ரிங்கிட் மற்றும் 32,799 ஹோங் கோங் டாலர் அதாவது சுமார் 17,310 ரிங்கிட் மதிப்பிலான சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளும் கண்டறியப்பட்டுள்ளன.
இக்குற்றங்கள் குறித்து 1953-ஆம் ஆண்டு சூதாட்டச் சட்டம், 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் 1959-ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



