
மலாக்கா, ஜூலை-15-மலாக்கா, Ayer Kerchவில் முதலீட்டு மோசடிக் கும்பலின் செயல்பாட்டு மையமாகப் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு மாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் 21 சீன நாட்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் 23 முதல் 54 வயதுக்கு உட்பட்டவர்கள். Melaka Tengah மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் வர்த்தகக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் குழு அந்நடவடிக்கையை மேற்கொண்டதாக அம்மாவட்ட காவல்துறையின் இடைக்காலத் தலைவர் Suprintendan Halim Abas தெரிவித்தார்.
அவர்களிடம் நாட்டிற்கான நுழைவு அனுமதிப் பத்திரம் இல்லை. அவர்கள் அழைப்பு மையத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளாக வேலை வழங்கப்படும் எனக் கூற அழைத்து வரப்பட்டது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குறுகிய காலத்தில் அதிக லாபம் தருவதாக உறுதியளித்து, இல்லாத இணைய முதலீட்டு வாய்ப்புகள் மூலம் ஏமாற்றுவதே இந்தக் கும்பலின் நடவடிக்கை என Halim Abas விளக்கினார்.
அச்சோதனையின் போது, எட்டு கணினிகள், தொலைத்தொடர்பு உபகரணங்கள், 14 ஐபோன் கைபேசிகள் மற்றும் ஒரு USB அடாப்டர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் மொத்த மதிப்பு RM25,000 ஆகும்.
தண்டனைச் சட்டம் மற்றும் குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரணைகளுக்கு உதவ, அனைத்து சந்தேக நபர்களும் 14 நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



