
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17-மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அனைத்து விமானிகளும் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மலேசிய விமானப் போக்குவரத்துக் குழுமமான MAG தெரிவித்திருக்கிறது. கடந்த ஆகஸ்ட் 15 அன்று நிறைவடைந்த முதல் கட்ட சிறுநீர் பரிசோதனைகளில் அது தெரிய வந்திருக்கிறது.
பாதுகாப்புத் தரத்தை வலுப்படுத்துவதையும், விமானப் பணியாளர்களின் பணிக்கான தகுதியை உறுதி செய்வதையும் முன்னிறுத்தி உரிய நெறிமுறைகளின் கீழ் அப்பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதோடு விமானப் பயணிகள் மற்றும் பங்குதாரர்களின் நம்பிக்கையைத் தக்க வைக்கவும் தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படும் என MAG குழுமத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான Captain Nasaruddin A. Bakar தெரிவித்தார்.
அடுத்தக் கட்டப் பரிசோதனை, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சுமார் 2,840 விமானப் பணியாளர்களுக்கு நாளை ஆகஸ்ட் 18 ஆன் தேதி தொடங்கி படிப்படியாக மேற்கொள்ளப்படவுள்ளது. அப்பரிசோதனைகள் செப்டம்பர் 3-ஆம் தேதிக்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே Firefly விமானிகள் மற்றும் விமானப் பணிக் குழுவினரை உட்படுத்திய கட்டம் வாரியான பரிசோதனையும் சாதகமான முடிவைக் காட்டியுள்ளது. ஆகஸ்ட் 15 நிலவரப்படி, சோதனைக்கு உட்படுத்தப்பட்ட அதன் 158 விமானிகள் மற்றும் 163 விமானப் பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், தடை செய்யப்பட்ட பொருட்கள் பயனீட்டில் இருந்து விடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
MAG தனது பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் குழு அதிகாரிகளின் உதவியுடன் உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரும் என Nasaruddin A.Bakar மேலும் கூறினார்.



