
கோலாலம்பூர், செப்டம்பர் 16 – கோலாலம்பூர், ஜாலான் கம்போங் பண்டார் டாலாம் (Jalan Kampung Bandar Dalam) சாலையில் மூன்று வாகனங்களை மோதிய ஹோண்டா சிவிக் கார் ஓட்டுநர், நான்கு வகை போதைப்பொருளை உட்கொண்டிருந்தது சிறுநீர் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
நேற்று முன்தினம், சமிக்ஞை விளக்கு சந்திப்பில் கட்டுப்பாட்டை இழந்த 30 வயது உள்ளூர் ஆடவர், மூன்று வாகனங்களை மோதியதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை தெரிவித்தது. இச்சம்பவத்தில் யாருக்கும் எவ்வித காயங்களும் ஏற்படவில்லை.
சம்பவம் தொடர்பாக நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் அளித்த ஓட்டுநரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்நபர் மதுபானம் அருந்தவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. எனினும், சிறுநீர் பரிசோதனையில் பென்சோ, மெத்தாம்பெட்டமைன், கெட்டமைன் மற்றும் ஆம்பெட்டமைன் (benzo, methamphetamine, ketamin & amphetamine) ஆகிய நான்கு வகை போதைப்பொருட்களை அவர் உட்கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இவ்விபத்து தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.



