
கோலாலம்பூர், ஜூன் 3 -ஹரி ராயா Aidiladha விடுமுறையைத் தொடர்ந்து, ஜூன் 4 ஆம்தேதி முதல் 7 ஆம்தேதிவரை கிள்ளான் பள்ளத்தாக்கிற்கு திரும்பும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க உதவும் வகையில், PLUS செயலி வழியாக MyPLUS-TTA டிஜிட்டல் பயண அட்டவணையைப் பயன்படுத்துமாறு PLUS மலேசியா பெர்ஹாட் (PLUS) வலியுறுத்தியுள்ளது.
இந்த நான்கு நாள் காலகட்டத்தில், தினசரி போக்குவரத்து அளவு கிட்டத்தட்ட 2.2 மில்லியன் வாகனங்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனம் கூறியது.
பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறைக் காலத்தைத் தொடர்ந்து, கிள்ளான் பள்ளத்தாக்கை நோக்கிய நீண்ட தூர மற்றும் நகரங்களுக்கு இடையிலான பயணங்களுக்கு ஜூன் 4, 5, 6 மற்றும் 7 ஆகிய நாட்கள் உச்ச நாட்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
போக்குவரத்தைப் பரவலாக்குவதை மேம்படுத்துவதற்காக, பண்டிகைக் காலம் முழுவதும் 33 முக்கிய இடங்களில் ஸ்மார்ட் வழித்தடங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
ஓய்வு மற்றும் வாகன நிறுத்துமிடங்களில் உள்ள உணவு, பானக் கடைகள், தொழுகை அறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் நெடுஞ்சாலைப் பயனாளர்களுக்காக 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றும் பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.



