
ஜோர்ஜ்டவுன், செப்டம்பர் 18 – இந்தோனேசியா ஜகார்த்தாவிலிருந்து பினாங்கு நோக்கி வந்த விமானத்தில் பயணி ஒருவரின் பணப்பையைத் திருட முயன்ற 55 வயதுடைய சீன நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக 36 வயதுடைய இந்தோனேசிய நாட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில், பினாங்கு அனைத்துலக விமான நிலையத்தில் (LTAPP) சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பாராட் டாயா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி அனுவால் அப்துல் வாஹாப் தெரிவித்தார்.
விமானப் பயணத்தின்போது, பாதிக்கப்பட்டவரின் உடைமைகள் வைக்கப்பட்டிருந்த மேல்பகுதியிலிருந்து அவரது பையை சந்தேகநபர் எடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அந்தப் பையைத் திறந்து பணப்பையை எடுத்தபோது, பயணி சம்பவத்தை தனது கைப்பேசியில் பதிவு செய்து விமானப் பணியாளர்களிடம் தெரிவித்தார்.
இதையடுத்து சந்தேகநபர் தடுத்து வைக்கப்பட்டதுடன், பாதிக்கப்பட்டவரின் அனைத்து உடைமைகளும் மீட்கப்பட்டன. இந்தச் சம்பவத்தால் எந்தவித இழப்பும் ஏற்படவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



