Latestமலேசியா

அசிசா வாழ்க்கைத் துணையாகக் கிடைத்தது என் பாக்கியம் – மகளிர் தினத்தில் நெகிழ்ந்த பிரதமர்

கோலாலம்பூர், மார்ச் 9 – வாழ்நாள் துணையாக டத்தின் ஸ்ரீ வான் அசிசாவைத் தேர்ந்தெடுத்தது தான், தாம் எடுத்த மிகவும் மகிழ்ச்சிக்குரிய முடிவுகளில் ஒன்று என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வருணித்துள்ளார்.

கல்லும் முள்ளும் நிறைந்த கரடு முரடான தனது வாழ்க்கைப் போராட்டத்தின் முக்கிய அங்கம் வான் அசிசா எனக் கூறிய அவர்,
“அசிசா மென்மையானவர், எளிமையானவர் என்று தான் எல்லாருக்கும் தெரியும். ஆனால் , தேவைப்படும் போது வாழ்க்கையில் கடினமான முடிவுகளை எடுக்கும் போது, அவரிடம் ஒரு தெளிவும் உறுதியும் வெளிப்படும்” என்றும் தெரிவித்தார்.

பிள்ளைகளை வளர்த்தெடுத்ததில், தந்தையான தம்மை விட வான் அசிசா தான் அதிகப் பங்காற்றியிருப்பதாக தம்மால் பெருமையாகக் கூறிக் கொள்ள முடியும் என அன்வார் சொன்னார்.

அரசியலில் சிக்கலான நேரத்தில் பிள்ளைகளுடன் அதிக நேரம் செலவிட்டு, அவர்களை , இன்றளவும் நற்பண்புகளோடு வளர்த்தப் பெருமை அசிசாவையே சாரும் என்றார் அவர்.

தாம் முன்பு சிறைவாசம் இருந்ததை மறைமுகமாகக் குறிப்பிட்டு, அதிக கசப்பான நேரங்களை அனுபவித்து அசிசா, தற்போது அதிகளவில் மகிழ்ச்சியான தருணங்களில் என்னுடன் இருக்கிறார் என அன்வார் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற அனைத்துலக மகளிர் தினக் கொண்டாட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது பிரதமர் அவ்வாறு சொன்னார்.

டத்தோ ஸ்ரீ அன்வார் சிறையில் இருந்த காலத்தில், சிறு வயதுப் பிள்ளைகளைத் தனியாக வளர்த்தெடுக்கும் சவாலோடு, கணவரின் போராட்டங்களுக்கு வெளியில் இருந்துத் தலைமையேற்று கட்சியை வழிநடத்தியவர் வான் அசிசா என்பது நாடறிந்த உண்மையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!