![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-22-Feb-2024-03-35-PM-2101.jpg)
கோலாலம்பூர், பிப்ரவரி 22 – தலைநகர், சுங்கை பெசியிலுள்ள, PPR மக்கள் வீடமைப்பு பகுதி ஒன்றில், தனது அண்டை வீட்டு சிறுமிக்கு முத்த கொடுத்து ஆபாசமாக நடந்து கொண்ட ஆடவன் ஒருவனுக்கு, நான்கு ஆண்டுகள் சிறையும், ஒரு பிரம்படியும் தண்டனையாக விதித்து செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
22 வயது முஹமட் ஜுல்கைரி ரொஸ்லி எனும் அவ்வாடவன் தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து அவனுக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு ஆகஸ்ட்டு மாதம் மூன்றாம் தேதி அவன் கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து அவனது தண்டனை அமலுக்கு வருவதாகவும் நீதிபதி அறிவித்தார்.
2022-ஆம் ஆண்டு, ஜூன் 25-ஆம் தேதி, மாலை மணி 3.30 வாக்கில், சுங்கை பெசியிலுள்ள, PPR அடுக்குமாடி குடியிருப்பின் 11-வது மாடியிலுள்ள, படிக்கட்டுக்கு அருகில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
அச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட சிறுமியின் 28 வயது தாய் செய்த புகாரை அடுத்து, கடந்தாண்டு ஆகஸ்ட்டு மூன்றாம் தேதி அவ்வாடவன் கைதுச் செய்யப்பட்டான் என்பது குறிப்பிடத்தக்கது.