கோலாலம்பூர், பிப்ரவரி 22 – இந்தியர்களின் பாரம்பரியமான வாழை இலை உணவின் மீது மிகுந்த விருப்பம் கொண்ட வெளிநாட்டு பெண் ஒருவர், கைகளை பயன்படுத்தி உணவு உண்பது எப்படி என தனது பெற்றோருக்கு வழிகாட்டும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளது.
அந்த காணொளியின் தொடக்கத்தில், வாழை இலை உணவை கரண்டியை பயன்படுத்தி உட்கொள்வது “சட்டவிரோதமானது” என அப்பெண் தனது பெற்றோரிடம் கேலியாக சொல்கிறார்.
அதன் பின்னர், இலையில் பரிமாறப்படும் ஒவ்வொரு உணவையும் அதன் பெயர் சொல்லி அவர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
அதோடு, இரசத்தை, “இந்தியர்களின் சூப்” எனவும், அப்பலத்தை எப்படி உடைத்து உட்கொள்வது எனவும் அப்பெண் தனது பெற்றோர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.
அதில் கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால், அப்பெண் மிகவும் சரளமாக மலாய் மொழியில் உணவக ஊழியரிடம் உரையாடியது தான்.
அச்சம்பவம் தொடர்பான காணொளி AgaEatsKL எனும் டிக் டொக் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வைரலாகியுள்ளது.
சுமார் 40 ஆயிரம் முறை அந்த காணொளி பகிரப்பட்டுள்ள வேளை ; இந்தியர்களின் பாரம்பரிய உணவை, கைகளால் சுவைத்து உண்ணும் அவர்களை பலர் பாராட்டி வருகின்றனர்.