
கூலாய், ஜூன்-18-ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு, DAP கட்சியின் சாத்தியமான பெண் வேட்பாளர்கள் ஹிஜாப் தலையங்கியைத் தவறான முறையில் அணிந்திருப்பது போல் சித்தரித்து பரப்பப்படும் போலியான போஸ்டரை பொது மக்கள் நம்ப வேண்டாம் என, மாநில DAP தலைவர் தியோ நீ சிங் எச்சரித்துள்ளார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்களிக்க மலாய்க்காரர் அல்லாத வாக்காளர்கள், குறிப்பாக சீன சமூகத்தினர் அஞ்ச வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த போஸ்டர் ஜோடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
அனைத்து மதங்களையும் DAP மதிப்பதாகவும், முஸ்லீம் பெண்களின் ஆடையான ஹிஜாப்பை அவமதிக்கும் இத்தகைய தரம் தாழ்ந்த செயலை அனைவரும் நிராகரிக்க வேண்டும் என்றும் அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புத் துறை துணையமைச்சருமான தியோ நீ சிங், இந்த போலி போஸ்டர் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு என சாடினார்.
ஜூன் 1-ஆம் தேதி ஜோகூர் மாநில சட்டமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலும், ஜூலை 11-ஆம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறவிருப்பது குறிப்பிடத்தக்கது.



