![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/baby.jpg)
பெட்டாலிங் ஜெயா, மே 28 – பிறந்து ஏழு நாட்களே ஆன ஆண் குழந்தையை புறக்கணித்து மரணம் ஏற்படுத்தியதை, கடந்த வாரம் ஒப்புக் கொண்ட தம்பதி, திரங்கானு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று தங்கள் வாக்குமூலத்தை மாற்றி, குற்றச்சாட்டை மறுத்தனர்.
21 வயது நூர் ஜஸ்யா அஸிலாவும், 24 வயது அல்ஹாபிஸ் முக்மினின் நூரும், நீதிபதி முன்னிலையில் தங்களுக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது மறுத்து விசாரணை கோரினர்.
அதனால், இவ்வழக்குடன் தொடர்புடைய மரபணு சான்றிதழ்களை ஒப்படைக்கும் தேதியாக, ஜூலை 31-ஆம் தேதியை அறிவித்தார் நீதிபதி.
முன்னதாக, அலட்சியம் காரணமாக பிறந்து ஏழு நாட்களே ஆன தங்கள் ஆண் குழந்தைக்கு மரணம் விளைவித்த குற்றச்சாட்டை, கடந்த வியாழக்கிழமை அவ்விருவரும் ஒப்புக் கொண்டிருந்தனர்.
அதனால், அவர்களுக்கு இன்று தண்டனை விதிக்கப்படும் என நீதிபதி அறிவித்திருந்தார்.
இம்மாதம் 18-ஆம் தேதி,காலை மணி ஏழுக்கும் 7.15-க்கும் இடைப்பட்ட நேரத்தில், ஜாலான் ஆயிர் பூத்தேவில் அவர்கள் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50 ஆயிரம் ரிங்கிட் அபராதமும், 20 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.