
அலோர் ஸ்டார், ஜூலை 3 – அலோர் ஸ்டார் மாநகராட்சி மன்றமான MBAS, ஷாஹாப் பெர்டானா (Shahab Perdana) வணிக வளாகத்தில் தொழிற்சாலை கட்டிடம் ஒன்றில் ரோஹிங்கியா (Rohingya) சிறார்களுக்காக அனுமதியின்றி நடத்தப்பட்ட பள்ளியில் சோதனை மேற்கொண்டது.
மேயர் டத்தோ அப்துல் கஃபார் யாஹ்யா (Mayor Datuk Abdul Gafar Yahya) கூறுகையில், சமூக ஊடகங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து, அமலாக்கப் பிரிவும் நகர மேம்பாட்டுத் திட்டப் பிரிவும் இணைந்து இந்தச் சோதனையை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
விசாரணையில், அந்தக் கட்டிடம் வாடகைக்கு எடுக்கப்பட்டு, அருகில் வசிக்கும் 26 ரோஹிங்கியா சிறார்களுக்கு பள்ளியாக பயன்படுத்தப்பட்டதும், ஒவ்வொரு மாணவரிடமும் மாதம் 100 ரிங்கிட் கட்டணம் வசூலிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இதையடுத்து, கட்டிட உரிமையாளர் மற்றும் வாடகையாளரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தொழிற்சாலை கட்டிடத்தை தவறாக பயன்படுத்தியது, அனுமதியின்றி கல்வி நிலையம் நடத்தியது, மற்றும் சம்பந்தப்பட்ட வெளிநாட்டவர்களின் குடியுரிமை நிலையைச் சரிபார்ப்பது தொடர்பாக கெடா மாநில கல்வித் துறை மற்றும் குடிநுழைவுத் துறை ஆகியவற்றுடன் இணைந்து மேல் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
நகரிலுள்ள அனைத்து கட்டிடங்களும் சட்டப்படி அனுமதிக்கப்பட்ட நோக்கத்திற்கே பயன்படுத்தப்படுவதை உறுதிசெய்ய MBAS தொடர்ந்து நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார்.



