கோலாலம்பூர், மார்ச்-20, இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியின் சில்லறை விலை சந்தையில் இன்று தொடங்கி 2 ரிங்கிட் முதல் 3 ரிங்கிட் வரையில் குறைகிறது.
தேசிய வாழ்க்கைச் செலவின நடவடிக்கை மன்றம் NACCOL வாயிலாக அரசாங்கம் செவ்வாய்க்கிழமை அதற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.
அம்முடிவு, மக்கள் நியாய விலையிலான அரிசி கையிருப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகளை அதிகரித்துள்ளதாக, விவசாயம் மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோ ஸ்ரீ முஹமட் சாபு சொன்னார்.
இறக்குமதி செய்யப்பட்ட 10 கிலோ வெள்ளை அரிசியின் நடப்பு விலை 38 ரிங்கிட்டில் இருந்து 45 ரிங்கிட் வரையில் இருக்கிறது.
இந்த புதிய விலைக் குறைப்பின் மூலம், அது 35 ரிங்கிட்டுக்குக் குறையும் என்றார் அவர்.
இந்த விலைக் குறைப்பானது, மக்களின் வாழ்க்கைச் செலவின சுமை குறிப்பாக ரமலான் மற்றும் வரக் கூடிய நோன்புப் பெருநாள் காலச் சுமையைக் குறைக்க உதவும் என்றும் மாட் சாபு நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், அனைத்து அரசாங்க குத்தகைகளும் இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை அரிசியையே பயன்படுத்தவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது.
இதன் மூலம், உபரி கையிருப்பான 20,000 மெட்ரிக் டன் உள்நாட்டு வெள்ளை அரிசியை வரும் ஏப்ரல் வாக்கில் சந்தையில் முழுமையாக விநியோகம் செய்ய முடியும் என மாட் சாபு மேலும் கூறினார்.