![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/allah.jpg)
கோலாலம்பூர், ஏப்ரல் 18 – அல்லா என்ற வார்த்தையைப் பயன்படுத்தி புண்படுத்தும் கூற்றுகளை வெளியிட்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட தொழில்நுட்ப பணியாளர் ஒருவருக்கு, ஆறு மாத சிறைத் தண்டனையும், 12 ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்த செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று இரத்துச் செய்தது.
34 வயது சியோக் வை லூங் எனும் அந்நபரை, மறுஆய்வு மனுவை தாக்கல் செய்ய அனுமதித்த பின்னர், முந்தைய குற்றச்சாட்டின் போது, அவர் அளித்த வாக்குமூலம் தவறானது, தெளிவான ஒப்புதல் வாக்குமூலம் அல்ல, நிபந்தனையற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது என நீதிபதி அறிவித்தார்.
அதனால், இரு தரப்பினரின் வாதங்களையும் செவிமடுத்த பின்னர், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்வதாக நீதிபதி சொன்னார்.
அதன் வாயிலாக, குற்றம் சாட்டப்பட்டவர் மீண்டும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு உத்தரவிடப்பட்டது. எனினும், கூடிய விரைவில், புதிய நீதிபதி தலைமையில் அந்த வழக்கு விசாரணை நடைபெற வேண்டுமெனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 22-ஆம் தேதி, இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் எழுதப்பட்ட அல்லா என்ற வார்த்தைக்கான அர்த்தம் புரியாமல், வை லூங் வெறும் “விசைப்பலகை வீரர்” போல நடந்து கொண்டதாக கூறி அவருக்கு, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சுசானா ஹுசின் தண்டனை விதித்தார்.
முன்னதாக, அல்லா காலுறை விவகாரம் தொடர்பில், பிறரை புண்படுத்தும் வகையில் கருத்துரைத்ததற்காக, வை லூங் வெளிப்படையாக மன்னிப்புக் கோரியதாக, உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.