![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-29-Nov-2023-11-06-AM-3985.jpg)
கோலாலம்பூர், நவம்பர் 29 – பல்வேறு இனம் மற்றும் கலாச்சார பின்னணியை கொண்ட மக்கள், தங்கள் சொந்த தாய்மொழியில் பேசி ஒன்றாக வாழும் நாடாக மலேசியா திகழ்கிறது.
இந்நிலையில், மலேசியர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் பேசுவதில் மிகவும் திறமையானவர்கள் என்பது, அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றின் வாயிலாக கண்டறியப்பட்டுள்ளது.
EF EPI எனப்படும் “EF English Proficiency Index” மேற்கொண்ட ஆய்வின்படி, ஆங்கிலம் பேசுவதில் மலேசியா உயர்நிலையில் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, 113 ஆசிய நாடுகளை உள்ளடக்கி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மலேசியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ள வேளை; 568 மதிப்பெண்களை பெற்று இரண்டாவது தரநிலையில் உள்ளது.
முதல் இரு இடங்களை முறையே சிங்கப்பூரும், பிலிப்பீன்ஸ்சும் வென்றுள்ளன.
இதனிடையே, உலகளாவிய தரவரிசையில், மலேசியா 25-வது இடத்தை பிடித்துள்ள வேளை ; கோலாலம்பூர் மட்டுமே 564 மதிப்பெண்களை பெற்று, EF EPI 2023 நகரங்கள் பட்டியலில், “உயர் தேர்ச்சி” பிரிவில் இடம்பிடித்துள்ளது.
குறிப்பாக, நாட்டிலுள்ள 26 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆங்கில புலமை அதிகம் உள்ளவர்களாக இருப்பதும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அதே சமயம், நாட்டில் ஆங்கிலப் புலமை நிறைந்த பகுதியாக பேராக் மாநிலமும், குவாந்தான் நகரமும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு உலகளாவிய நிலையில், சுமார் 22 லட்சம் பேர் இணையம் வாயிலாக எழுதிய EF SET அல்லது EF Standard English Test தேர்வு அடிப்படையில் இந்த EF EPI ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.