![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-07-Dec-2023-09-21-AM-3694.jpg)
கோலாலம்பூர், டிச 7 – காணாமல்போனதாக கூறப்பட்ட ஆட்டிசம் ‘Autism’ எனப்படும் மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுவன் ஜெய்ன் ரய்யானின் உடல் டமன்சரா டமாய், இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அவனது வீட்டிற்கு அருகேயுள்ள ஆற்றில் இறந்து கிடந்த நிலையில் நேற்றிரவு கண்டுப்பிடிக்கப்பட்டது.
நேற்றிரவு 10 மணி அளவில் அச்சிறுவனின் உடல் மீட்கப்பட்டதாக பெட்டாலிங் ஜெயா ஓ.சி.பி.டி துணை கமிஷனர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது தெரிவித்தார்.
காணாமல்போன அந்த சிறுவனை தேடும் மற்றும் மீட்பு நடவடிக்கையில் செவ்வாய்க்கிழமை டிசம்பர் 5-ஆம் தேதி முதல் போலீசார் ஈடுபட்டு வந்தனர். ஆகக்கடைசியாக செவ்வாய்க்கிழமையன்று டமன்சரா டமாயில், இடமான் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அச்சிறுவன் காணப்பட்டதாக கூறப்பட்டது.
அந்த சிறுவன் காணாமல்போனது குறித்து செவ்வாய்க்கிழமை மாலை மணி 6.36 அளவில் போலீஸ் புகார் கிடைக்கப்பெற்றதாக ஏ.சி.பி முகமது ஃபக்ருதீன் தெரிவித்தார். ஜெய்ன் டமன்சாரா டாமாய் 2 தேசிய பள்ளியின் முத்திரை கொண்ட டி-சட்டையையும் கருமை நிற விளையாட்டு காற்சட்டையையும் கருப்பு நிற பள்ளி காலணியையும் அணிந்திருந்ததாக கூறப்பட்டது.
40 போலீஸ் அதிகாரிகள் மற்றும் 60க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகளைக் கொண்ட தேடும் குழுவினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேடும் நடவடிக்கையில் ஈடுபட்ட பின் அச்சிறுவனின் உடலை கண்டுப்பிடித்ததாக ஃபக்ருதீன் கூறினார்.
பேச முடியாத தமது மகனை காணும் பொதுமக்கள் உடனடியாக தம்முடன் தொடர்பு கொள்ளும்படி அச்சிறுவனின் தாயார் தமது முகநூல் மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார். இதனிடையே நேற்றிரவு அச்சிறுவனின் உடல் மீட்கப்பட்டபோது அவனது தந்தை மயங்கி விழுந்த நிலையில் தாயார் பெரும் சோகத்தில் காணப்பட்டார்.