![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-03-Jun-2024-08-56-AM-2298.jpg)
கோத்தா பாரு, ஜூன்-3, பேராக், கெரீக் அருகே கிழக்கு மேற்கு நெடுஞ்சாலையில் மிகவும் ஆபத்தான முறையில் பேருந்தை ஓட்டிச் சென்ற ஓட்டுநர், பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
36 வயது அவ்வாடவரின் செயல் வீடியோவில் பதிவாகி வைரலானதை அடுத்து, அவர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதை, Konsortium E-Mutiara பேருந்து நிறுவனம் உறுதிபடுத்தியது.
அந்நிறுவனத்தில் கடந்த ஈராண்டுகளாக பேருந்து ஓட்டுநராக வேலை செய்து வரும் அவ்வாடவருக்கு, விளக்கமளிக்கக் கோரும் கடிதமும் வழங்கப்பட்டுள்ளது.
குறுகலான இருவழிச் சாலையின் இரட்டை வெள்ளைக் கோட்டில் மிகவும் ஆபத்தான முறையில் லாரியொன்றை பேருந்து முந்திச் செல்லும் வீடியோ முன்னதாக டிக் டோக்கில் வைரலானது.
அதைப் பார்த்து தாமே அதிர்ச்சி அடைந்ததாகக் கூறிய E-Mutiara பேருந்து நிறுவனத்தின் தலைவர் Che Ibrahim Che Ismail, விபத்தைத் தவிர்க்கும் நோக்கில் லாரி ஓட்டுநர் அனுசரணையாகக் நடந்துக் கொண்டதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
பயணிகளின் பாதுகாப்புப் பற்றி கவலைப்படாமல் நடந்துக் கொள்ளும் ஓட்டுநர்களிடம் அனுசரணைக் காட்டப்படாது; அவர்களை உடனடியாக வேலையை வீட்டு நீக்கவும் தயங்க மாட்டோம் என்றார் அவர்.
பொது மக்களின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், எந்நேரமும் நிதானமாக பேருந்தை ஓட்ட வேண்டும் என அவர்களுக்கு அறிவுறுத்தி வந்துள்ளோம்.
எனவே, பயணத்தின் போது இது போன்று எல்லை மீறும் ஓட்டுநர்களை பயணிகள் வீடியோ எடுப்பதை வரவேற்பதாகவும் Che Ibrahim சொன்னார்.
அச்சம்பவம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக அந்நபர், கெரீக் போலீசால் அழைக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது.