![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-04-Dec-2023-11-58-AM-839.jpg)
பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 4 – இந்திரா காந்திக்கு 14 ஆயிரம் ரிங்கிட் செலவுத் தொகையை வழங்கும் உத்தரவை நிறுத்தி வைக்கும் அரசாங்கத்தின் விண்ணப்பத்தை, உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இந்திரா காந்திக்கு, அரசாங்கம் 14 ஆயிரம் ரிங்கிட் செலவுத் தொகையை வழங்க வேண்டுமென, 2021-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி உயர் நீதிமன்றமும், 2022-ஆம் ஆண்டு, செப்டம்பர் ஏழாம் தேதி, மேல்முறையீட்டு நீதிமன்றமும் உத்தரவிட்டிருந்தன.
அந்த உத்தரவை தடை செய்ய ஏதுவாக, அரசாங்கம் செய்திருந்த விண்ணப்பம் தகுதியற்றது என்பதோடு, சிறப்பு சூழ்நிலைகள் எதுவும் அடையாளம் காணப்படாததால், அது நிராகரிக்கப்படுவதாக, உயர் நீதிமன்ற நீதிபதி ராஜா அஹ்மாட் மொஹ்சானுடின் இன்று அறிவித்தார்.
அதே சமயம், மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்பதையும் நீதிபதி சுட்டிக் காட்டினார்.
இந்திரா காந்திக்கு, இன்று மேலும் ஈராயிரம் ரிங்கிட் செலவுத் தொகை வழங்கப்பட்டது.
ராஜேஷ் நாகராஜன், பவித்ரா லோகநாகதன் ஆகியோர் இந்திரா காந்தி சார்பில் ஆஜரான வேளை ; தேசியப் போலீஸ் படைத் தலைவர் மற்றும் மத்திய அரசாங்கம் சார்பில், மூத்த அரசாங்க வழக்கறிஞர் ஆண்டி ரசாலிஜெயா மற்றும் சாபியா ஒமார் ஆகியோர் வாதாடினர்.