
கோலாலம்பூர், செப்டம்பர்-19-இவ்வாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் 16 வரை நாட்டில் மொத்தம் 68,177 பணியாளர்கள் வேலை இழந்துள்ளனர்.
இது கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 15,196 அதிகமாகும் என்று பொருளாதார அமைச்சர் அக்மால் நாசிர் தெரிவித்தார்.
உற்பத்தித் துறை மற்றும் மொத்த-சில்லறை வர்த்தகத் துறை ஆகியவை வேலை இழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) உயர்ந்துவரும் செயல்பாட்டுச் செலவுகளால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன என்றார் அவர்.
வேலை இழப்புகள் அதிகரித்திருந்தாலும், ஜூலை மாத நிலவரப்படி நாட்டின் வேலையின்மை விகிதம் 3% நிலையாக நீடிப்பதால் ஒட்டுமொத்த தொழில் சந்தையும் உறுதியுடன் உள்ளது.
வேலைவாய்ப்பு காப்பீட்டுத் திட்டம் (EIS) மற்றும் MYFutureJobs வழியாக 143,653 தொழிலாளர்கள் புதிய வேலைகளைப் பெற சமூகப் பாதுகாப்பு நிறுவனமான PERKESO உதவியுள்ளது.
அதே சமயம், தேசியப் பொருளாதார நடவடிக்கை மன்றக் கூட்டத்தைத் தொடர்ந்து, மலேசியாவை ஒரு நிலையான “World+1” முதலீட்டுத் தலமாக மாற்றுவதற்கும், குறிப்பாக semiconductor, விண்வெளி மற்றும் பசுமை ஆற்றல் துறைகளை மேம்படுத்துவதற்கும் அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் சொன்னார்.



