
ஈப்போ, நவ 20 – பேராவில் ஈப்போ புந்தோங் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலயம் மற்றும் கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் ஆகியவற்றைப் பராமரிக்கும் ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபாவின் தலைவர் மற்றும் இதர பொறுப்பாளர்களை தேர்வு செய்வதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று புந்தோங் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் நடப்பு தலைவரான எம். விவேகானந்தா மும்முனைப் போட்டியை எதிர்நோக்கியுள்ளார். அவரை எதிர்த்து நடப்புத் துணைத்தலைவர் சுப்பிரமணியம், சீத்தாராமன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தலைவர் பதவிக்கு முள்ளாள் தலைவர் தாமோதரன் மற்றும் நடேசன் ஆகியோர் வேட்பு மனுக்களை சமர்ப்பித்த போதிலும் அவர்களது வேட்பு மனுவில் ஒரே நபர் முன்மொழிந்தும் வழிமொழிந்தும் இருப்பதால் அந்த மனுக்களை நிராகரித்தாக தேர்தல் அதிகாரி வழக்கறிஞர் எஸ். மோகன் தெரிவித்தார்.
அதே வேளையில் துணைத்தலைவர் பதவிக்கு மு. சௌந்தரபாண்டியன், க. சுரேன் மற்றும் பா. மாதவன் ஆகிய மூவரும் களம் இறங்கியுள்ளனர். செயலாளர் பதவிக்கு தியாகராஜன் முத்து, சிவம் பழனிசாமி ஆகிய இருவரும் துணைச்செயலாளர் பதவிக்கு கே. சண்முகம், டாக்டர் சசீதரன் மூர்த்தி, ஆ. காளியப்பன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
பொருளாளர் பதவிக்கு கி. ஆண்டாள் நேசன், சு. சாம்பசிவம் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். செயலவைக்கான 8 இடங்களுக்கு மொத்தம் 20 பேர் போட்டியிடுகின்றனர். தவிர, யாழ்ப்பாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இரண்டு இடங்களுக்கு மூவர் போட்டியிடுகின்றனர். கணக்காய்வாளர் பதவிக்கு எஸ். கிருஷ்ணன், மா. ஆறுமுகம், சி. இராமசுந்தரன், வி. சுப்பையா ஆகிய நான்கு பேர் களம் இறங்குகின்றனர். ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா தேர்தல் வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு புந்தோங் அருள்மிகு மகா மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.