
செபராங் ஜெயா, மே-30-பினாங்கு, தேசிய வகை அஸாத் தமிழ்ப்பள்ளியின் ஏற்பாட்டில், அனைத்து மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான தேசிய அளவிலான பிரம்மாண்ட சதுரங்கப் போட்டி, செபராங் ஜெயாவில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும், பினாங்கு தமிழ்ப்பள்ளிகளின் சிறப்புக்குழு தலைவருமான டத்தோ ஸ்ரீ சுந்தராஜூ சோமுவின் முழு நிதி ஆதரவோடு இப்போட்டி நடைபெற்றது.
இதில் பெர்லிஸ், கெடா, பேராக் மற்றும் பினாங்கு ஆகிய 4 மாநிலங்களிலிருந்து 300-க்கும் மேற்பட்ட ஆரம்பப்பள்ளி மாணவர்கள், தமிழ்ப் பள்ளியில் பயின்ற 98 இடைநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர் என மொத்தம் 413 போட்டியாளர்கள் பங்கேற்றுத் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவர்களுக்கு இலவச பங்கேற்புடன், தேசிய அளவிலான அங்கீகாரத்துடன் PAJSK புள்ளிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன், இப்போட்டி ஆண்டுதோறும் தொடர வேண்டும் என வாழ்த்தினார்.
பினாங்கு கல்வித் திணைக்களத்தின் தமிழ்ப்பள்ளி உதவி இயக்குனர் கார்திக் மாரி, மாணவர்களின் சாதனை தம்மை நெகிழ்த்தியதாகக் கூறி வெற்றிக் கோப்பைகளையும், PAJSK புள்ளிகளுக்கான சான்றிதழ்களையும் எடுத்து வழங்கினார்.
பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளத் வாரியம் மற்றும் தேஜே சதுரங்க அகாடமி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் உருவான இப்போட்டி, மலேசியத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அறிவுத்திறனுக்கு உன்னத சான்றாக அமைந்துள்ளது.



