
லக்னோ, ஜூலை-26-இந்தியா உத்தரப் பிரதேசத்தில், பிரிந்து வாழ விருப்பமின்றி உடன்பிறந்த 3 சகோதரிகள் ஒரே ஆடவரைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சமூக ஊடக உள்ளடக்க உருவாக்குநர்களான 20 வயது சரோஜ், 19 வயது சாவித்திரி மற்றும் 18 வயது சந்தோஷ் ஆகிய 3 சகோதரிகளும், தங்களுடன் புகைப்படக்காரராகப் பணியாற்றிய விகாஸ் என்பவரைச் சாமூண்டா மாதா கோயிலில் வலம் வந்து திருமணம் செய்துகொண்டனர்.
சிறு வயது முதலே ஒன்றாக வாழ்ந்து விட்டோம்; இந்நிலையில், தனித்தனியாகத் திருமணம் செய்து பிரிவதைத் தவிர்க்கவே, ஒருமனதாக இம்முடிவை எடுத்ததாக அச்சகோதரிகள் வீடியோ மூலம் நியாயப்படுத்தியுள்ளனர்.
என்றாலும், இந்து திருமணச் சட்டத்தின் கீழ் இத்திருமணத்திற்குச் சட்டப்பூர்வ செல்லுபடி கிடையாது எனச் சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஆனால், புகார் ஏதும் வராததால் போலீஸார் இதுவரை எவ்வித வழக்கும் பதிவுச் செய்யவில்லை.



