
தெஹ்ரான், ஜூலை-4 – ஈரானிய உச்சத் தலைவரான ஆயதொலா அலி கமேனியின் மறைவுக்குப் பிறகு, 4 மாதங்கள் கழித்து அவரது இறுதிச் சடங்குகள் தற்போது தொடங்கியுள்ளன.
இந்த நீண்ட கால தாமதம் உலகளவில் பெரும் கேள்விகளை எழுப்பியிருந்த நிலையில் அதற்கான விடை தெரியவந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டார்.
ஆனால், வளைகுடா வட்டாரத்தில் நிலவிய போர்ச் சூழல் மற்றும் கடுமையான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாக, அவரது இறுதிச் சடங்குகள் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டன.
போர்க்கால சூழலில் லட்சக்கணக்கான மக்கள் கூடும் இத்தகைய நிகழ்வை நடத்துவது பெரும் பாதுகாப்பு சவாலாக இருந்ததே இந்த தாமதத்திற்கு முக்கியக் காரணம்.
இஸ்லாமிய சட்டப்படி இரசாயன முறையிலான பதப்படுத்துதல் தடைசெய்யப்பட்டுள்ளதால், அதிகாரிகள் குளிர்சாதன வசதி கொண்ட பிரத்யேக தடயவியல் பிரேத அறையில் (Forensic Mortuary) அவரது உடலைப் பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
தீவிர அவசர காலங்களில், ஷியா சட்டத்தின்படி இது அனுமதிக்கப்பட்ட ஒன்றாகக் கருதப்படுகிறது.
தற்போது போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்துள்ளதால், தெஹ்ரான், கும் மற்றும் ஈராக் பகுதிகளில் இறுதி ஊர்வலங்கள் தொடங்கியுள்ளன.
ஜூலை 9-ம் தேதி மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா கல்லறையில் அவரது இறுதி அடக்கம் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வை ஈரானிய அரசு தனது அதிகார பலத்தையும், நிலைத்தன்மையையும் உலகிற்கு உணர்த்தும் ஒரு தளமாகப் பார்க்கிறது.



