கோலாலம்பூர், மார்ச் 11 – இவ்வாண்டு பள்ளி தவணைக் காலத்தின் முதல் நாளான இன்று காஜாங்கிலுள்ள ‘West country Barat’ தமிழ்ப் பள்ளிக்கு கல்வி அமைச்சர் ஃபட்லினா வருகை புரிந்தார். அவர் அங்குள்ள மாணவர்களிடம் கலந்துரையாடியதோடு முதல் வகுப்பில் புதிதாக இணைந்த மாணவர்களையும் சந்தித்தார்.
அப்பள்ளி மாணவர்களின் படைப்புகளை பார்வையிட்ட அவர் பள்ளி மாண்டபம் , வகுப்பறைகளையும் பார்வையிட்டார். கல்வி வசதியை பெறுவதில் எந்த மாணவர்களும் பின்தங்கிவிடக்கூடாது என்பதில் கல்வி அமைச்சு உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்த வருகையின்போது பள்ளியின் தகவல் தொழிற்நுட்ப அறையை மேம்படுத்துவதற்காக 50,000 ரிங்கிட மான்யம் வழங்கப்படும் என்றும் ஃபட்லினா அறிவித்தார். தகவல் தொழிற்நுட்ப அறையை மேம்படுத்துவதன் மூலம் அந்த அறையின் வசதியை அதிகமான மாணவர்கள் பயன்படுத்த முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.