![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-19-Mar-2024-06-08-PM-2264.jpg)
கோலாலம்பூர், மார்ச் 19 – காய்கறிகள் மீது உச்சவரம்பு விலையை விதிக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று உள்நாட்டு வாணிகம் மற்றும் வாழ்க்கை செலவின துணையமைச்சர் ‘Fuziah Saleh’ தெரிவித்திருக்கிறார்.
காய்கறிகளின் விலைகளை அமைச்சு தொடர்ந்து கண்காணிக்கும் என்பதோடு விலை கட்டுப்பாடு மற்றும் கொள்ளை லாபத்திற்கு எதிரான 2011 ஆம் ஆண்டின் சட்டத்தின் கீழ் நியாயமற்ற முறையில் விலைகளை உயர்த்தும் வர்த்தகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
இச்சட்டத்தின்கீழ் வர்த்தகர்கள் செலவில் 50 விழுக்காட்டிற்கு மேல் லாபம் ஈட்ட முடியாது. விநியோகம், உற்பத்தி செலவுகள், மொத்த மற்றும் சில்லறை விலைகளை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டிய தேவை இருப்பதாக ‘Fuziah Saleh’ தெரிவித்தார்.
விநியோகம் குறைவாக இருப்பதால் காய்கறிகளின் விலை 25 விழுக்காடு ஏற்றம் காணும் என வெளியான தகவல் குறித்து செய்தியாளர்கள் வினவப்பட்டபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான கோட்டாவை மார்ச் 31ஆம் தேதிக்கு முன்னதாக பயன்படுத்தாவிட்டால் அவற்றை ரத்து செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கையை தொடர்ந்து தொழிலாளர் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் காய்கறி உற்பத்தியில் 40 விழுக்காடு அடுத்த மாதம் குறையக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.