
கினாபாதாங்கான், மே 19 – கினாபாத்தாங்கான் தொங்கோட் (Tongod) பகுதியிலிருக்கும் சுங்கை பினாங்கா (Sungai Pinangah) வனப்பகுதி அருகே உள்ள ஒரு தோட்டத்தில், ஒரு காட்டு யானையின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த யானையின் முகத்தின் ஒரு பகுதி மற்றும் தந்தங்கள் காணாமல் போயிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
தோட்ட பணியாளர்கள் நேற்று காலை சுமார் 6.30 மணியளவில் சடலத்தை கண்டதாக தெரிவித்துள்ளனர். அதற்கு முந்தைய இரவு வெடிப்பு சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
வனவிலங்கு துறை (JHL) அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்ப ஆய்வில், அது சுமார் 2.9 மீட்டர் உயரமுள்ள ஆண் பிக்மி போர்னியோ யானை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகம் மற்றும் தந்தங்கள் கூர்மையான கருவியால் வெட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் சம்பவ இடத்தில் துப்பாக்கிச் சூடு அடையாளங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்த சம்பவம் குறித்து முழுமையான விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. சட்டவிரோத வேட்டையாடல் உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



