
கிள்ளான், ஜூலை-24-கிள்ளான், புக்கிட் திங்கியில் பணப் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்ட கொள்ளை முயற்சி மற்றும் துப்பாக்கி பறிப்புச் சம்பவம் தொடர்பாக, போலீஸார் ஒருவரை ஷா ஆலாமில் கைதுச் செய்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை வங்கியின் முன்பு பணம் ஏற்றிச் சென்ற வாகனத்தைக் கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர், காவலரின் _pump gun_ துப்பாக்கியைப் பறித்துச் சென்றதுடன் மோட்டார் சைக்கிளில் தப்பியோடியதாக, புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.
ஷா ஆலாமில் கைதுச் செய்யப்பட்ட 20 வயது மதிக்கத்தக்க அந்த உள்ளூர் நபரிடமிருந்து, ஒரு _ekol lite starter_ கைத்துப்பாக்கி மற்றும் 48 வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
ஆயுதச் சட்டம் மற்றும் ஆயுதமேந்திய கொள்ளைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரிக்க, இன்று நீதிமன்ற ஆணைப் பெறப்படும் என குமார் சொன்னார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஆயுட்கால சிறைத்தண்டனையும் அதிகபட்சம் 6 பிரம்படிகளும் விதிக்கப்படும்.



