![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-13-Feb-2024-03-10-PM-6429.jpg)
குவாந்தான், பிப்ரவரி 13 – பஹாங், குவாந்தான், தெலுக் தொங்காங்கில், உயரமான பாறைப் பகுதியிலிருந்து, வீடியோ அழைப்பு செய்துக் கொண்டிருந்த நேப்பாள ஆடவர் ஒருவர், தவறி நீரில் விழுந்து உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
22 வயது கணேஷ் ராணா எனும் அவ்வாடவன், நீரில் மூழ்கிய சம்பவம் தொடர்பில், நேற்று மாலை மணி 5.50 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததாக, குவாந்தான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் வான் முஹமட் ஜஹாரி வான் புசு தெரிவித்தார்.
குவாந்தானிலுள்ள, தொழிற்சாலை ஒன்றில் பணிப்புரியும் அவ்வாடவர், சீனப் புத்தாண்டு பொது விடுமுறையை முன்னிட்டு, தனது நண்பர்கள் சிலருடன் சம்பவ இடத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
பெரிய பாறை ஒன்றின் மேல் ஏறி அமர்ந்திருந்த அவர், மாலை மணி 4.30 வாக்கில், தனது சகோதரிக்கு வீடியோ அழைப்பு செய்ய முற்பட்ட போது, கால் தவறி நீரில் விழுந்தார்.
உடன் இருந்தவர்கள், அவரை காப்பாற்ற முயன்ற போதும், உயர் அலைகள் காரணமாக அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.
சம்பந்தப்பட்ட ஆடவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.