
கோத்தா பாரு, செப்-11-கிளந்தான், கோத்தா பாருவில் Kampung Gok Kaporரில் ஏற்பட்ட தீ விபத்தில் 66 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார். தீயில் நூறு ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அவரது பூர்வீக வீடும் முற்றாகச் சேதமடைந்தது. உயிரிழந்தவர் Kong Choo Hock என அடையாளம் காணப்பட்டுள்ளது.
RELA உறுப்பினரான Kong நேற்றிரவு வேலை முடிந்து வீடு திரும்பிய பின் இரவு உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது சிறிய வெடிப்புச் சத்தத்தைக் கேட்ட அண்டை வீட்டுக்காரர் ஜன்னலைத் திறந்து பார்த்துள்ளார். வீடு தீப்பற்றி எரிவதைக் கண்டு கதவைத் தட்டி வெளியே வருமாறு அவர் அழைத்த நிலையில், சிறிது நேரம் பதிலளித்த பின் Kongங்கின் குரல் கேட்கவில்லை என உறவினரான Wee Suey See தெரிவித்தார்.
தகவல் கிடைத்து சம்பவ இடத்தைச் சென்றடைந்த கிளந்தான் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினர் Kongங்கின் சடலத்தை வீட்டின் தரைத்தள குளியலறையில் கண்டெடுத்தனர். கையில் தண்ணீர் பாத்திரத்துடன் காணப்பட்ட அவரது உடலில் கடுமையான தீக்காயங்கள் இல்லை. அடர்த்தியான புகையைச் சுவாசித்ததால் அவர் உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.
தீயிலிருந்து தப்பிக்க Kong முயன்றிருக்கலாம். பின்பக்கக் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரால் வெளியேற முடியாமல் போயிருக்கலாம். எனவே குளியலறையில் அவர் தஞ்சமடைந்திருக்கலாம் என தீயணைப்பு, மீட்புத்துறை கூறியது. தீக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருகிறது.
திருமணமாகாத Kong, நீண்ட காலமாக மின்சாரம் இல்லாத, தனது மறைந்த பெற்றோரின் அந்த பூர்வீக வீட்டில் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது.



